கீ அன்சர் குளறுபடியை சுட்டிக்காட்டி தேர்வு வாரியத்திற்கு பட்டதாரிகள் மனு
23 Oct 2012 08:01,
(23 Oct) சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கீ,ஆன்சர் வெளியிட்டதில் மீண்டும் குளறுபடிகள் உள்ளதை சுட்டிக்காட்டி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பட்டதாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இரண்டு வாரத்தில் ரிசல்ட்டை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்மானித்துள்ளது.தமிழகத்தில் இரண்டாவது முறையாக கடந்த 14ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முதல் தாளில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 412 பேரும், இரண்டாம் தாளில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 797 பேரும் எழுதினர். இரண்டு தேர்விலும் 85 ஆயிரத்து 829 பேர் தேர்வு எழுத வரவில்லை.இந்நிலையில், கடந்த 14ம் தேதி நடந்த தேர்வுக்கான கீ,ஆன்சர் 20ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் நான்கு பிரிவு கேள்வி தாள்களுக்கான விடைகள் பாட வாரியாக தனித்தனியே வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் விடைகள் மீண்டும் குழப்பமாகவே வெளியிட்டுள்ளனர். சில கேள்விகளுக்கு 2 விடைகளும், சில கேள்விகளுக்கு விடைகள் குறிப்பிடாமல் வெறுமனே விட்டுள்ளனர். இதனால் மீண்டும் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் நடந்த தகுதி தேர்வில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்களஇடம்பெற்றன. இதுபற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் மீண்டும் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் இடம் பெற்ற முதல்தாளுக்கான கேள்வியில் கணக்கு பாடத்தில் 10க்கும் மேற்பட்ட கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டன. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை கொடுத்துவிட்டு கேள்விகள் மட்டும் உயர்வகுப்புகளில் இருந்து கேட்டதால் டிடிஎட் முடித்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.இரண்டாம் தாளில் 10க்கும் மேற்பட்ட கேள்விகள் 9, 10, பிளஸ்1, பிளஸ் 2 பாடங்களில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. குறிப்பாக தமிழில் சில கேள்விகள் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. கணக்கு பாடத்தில் 10க்கும் மேற்பட்ட கேள்விகள் வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அறிவியல் அதைவிட மோசம். இந்நிலையில் கீ,ஆன்சரில் மீண்டும் குள றுபடிகள் ஏற்பட்டுள்ளன.மேற்கண்ட குளறுபடிகள் அதிகம் நடந்ததால் முதல் முறை நடந்த தேர்வில் 6.50 லட்சம் பேரில் 2395 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இரண்டாம் முறை தேர்விலோ 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் தான் தேறுவார்கள் என்று தெரிகிறது. முதல் முறை நடந்த தேர்வில் 50 மதிப்பெண் எடுத்து தேறாமல் போனவர்கள், இந்த முறை அனுமதிக்கப்பட்ட 3 மணி நேர உபயத்தால், 80 மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் தேர்ச்சி வீதத்தை பொறுத்தவரை இந்த முறையும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த ஏற்கெனவே அரசு அறிவித்த 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதை, இந்த முறை 55 சதவீதமாக குறைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி செய்துள்ளது. ஆனால் அரசு தரப்பில் அதற்கு அனுமதிக்கவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கீ,ஆன்சர் மீது ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்ததின் பேரில் விடைகள் குறித்து பட்டதாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த முறையும் ஆசிரியர் தேர்வு வாரியம் பிரச்னையை சந்திக்க உள்ளது. இதற்கு பிறகும் 3வது தேர்வு என்றால் வைத்தால் பட்டதாரிகளின் நிலைமை என்னாகும்? இந்நிலையில் அடுத்த இரண்டு வாரத்தில் தகுதித் தேர்வுக்கான ரிசல்ட்டை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்மானித்துள்ளது.
நன்றி:(23 அக்) தினகரன் நாளிதழ் .